கோவையில் ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: காங்கிரஸார் சாலை மறியல்- 300 பேர் கைது
கோவை: கோவையை அடுத்துள்ள சூலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த சூலூர் பட்டணம்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் சிலையின் முகத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து உடனே உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
மேலும், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.சின்னையன் தலைமையில் அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சிக்னலில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications