ராஜபக்சேவுக்கு எதிராக போபாலிலும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்- கோவையில் ரயில் மறியல்
போபால்: ராஜபக்சேவுக்கு எதிராகவும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் தமிழ் ஈழம் வேண்டியும், ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரியும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம் என போராட்டங்கள் வெடித்துக் கொண்டுள்ளன.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பெரும் திரளான தமிழர்கள் திரண்டு ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் அவர்கள் ராஜபக்சேவின் இனவெறிப் படுகொலைகளை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
ராஜபக்சே நிகழ்த்திய இனவெறிப் படுகொலைகளை சித்தரிக்கும் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஏந்தியபடி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவையில் ரயில் மறியல்

இதேபோல கோவையில், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் பேரவை சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஈழத்தில் நடந்த இனவெறிக் கொலை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நிகழ்த்திய ராஜபக்சேவை கைது செய்து தண்டிக்க வேண்டும், தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் என்ஜின் முன்பு மாணவர்களும், மாணவியரும் படுத்தும், உட்கார்ந்தும் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications