ஜோசப்பில் ஆரம்பித்து ஸ்டாலின் வீடு வழியாக அழகிரியின் பண்ணை வரை போன சிபிஐயின் 'கார் சேஸ்'!

கடந்த மாதமே அனுமதி தந்த சிபிஐ இயக்குனர்:
ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்ட நேரம் தவறானது, கூட்டணி முறிந்தவுடன் ரெய்ட் நடத்தப்பட்டது தவறு என்று சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார். இந்த ரெய்ட் நடவடிக்கை குறித்து துறைரீதியான விசாரணைக்கும் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஸ்டாலின் வீ்ட்டில் ரெய்ட் நடத்த கடந்த மாதமே சின்ஹா அனுமதி அளித்துவிட்டதாக பெயர் வெளியிட விரும்பாத மூத்த சிபிஐ அதிகாரி கூறியுள்ளார்.
நாராயணசாமியும் கவலை...
இந்த ரெய்ட் சிபிஐ அமைப்பை நிர்வகிக்கும் மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கு தெரிந்தே நடந்ததாக தகவல்கள் வந்தன. இதற்காக சோனியா இவரை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த சில அதிகாரிகள் தாங்களாகவே முடிவெடுத்து, தவறான நேரத்தில் ரெய்ட் நடத்திவிட்டதாக நாராயணசாமி கவலையுடன் கூறுகிறார்.
சிபிஐ பல்டி:
முதலில் இதை ரெய்ட் என்று சொன்ன சிபிஐ பின்னர் இதை சாதாரண விசாரணை தான் என்று பல்டி அடித்தது.
ஸ்டாலினை குறி வைக்கவில்லை-சிபிஐ:
மேலும் இது ஸ்டாலினை குறி வைத்து நடத்தப்பட்ட விசாரணை இல்லை என்றும், ரூ. 48 கோடி வரை கஸ்டம்ஸ் வரி ஏய்ப்பு செய்த கார் இறக்குமதியாளர்கள் குறித்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு (Department of revenue intelligence) தந்த புகாரின்படியே இந்த விசாரணை நடந்ததாகவும் சிபிஐ கூறியுள்ளது.
அலெக்ஸ் ஜோசப்பின் 'அலேக்' மோசடி:
வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தந்த புகாரின்படி அலெக்ஸ் ஜோசப் என்ற கார் இறக்குமதியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அவர் கஸ்டம்ஸ் வரியைக் கட்டாமல் பென்ட்லி, போர்சே, ஹம்மர் உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 33 கார்களை இறக்குமதி செய்து விஐபிக்களுக்கு விற்றுள்ளதாக எப்ஐஆரில் பதிவு செய்துள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
ராமச்சந்திரா பல்கலை வேந்தரிடம் சிக்கிய 7 கார்கள்:
இந்தக் கார்களை அடையாளம் காணவே தமிழகம் முழுவதும் நேற்று மொத்தம் 18 இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றதாகவும், ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆர்.வெங்கடாசலத்திடம் 7 இறக்குமதி செய்யப்பட்ட கார்களும், எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான இறக்குமதி செய்யப்பட்ட 2 கார்களும், ஜி.கே.ஷெட்டி ராமண்ணா என்பவருக்குச் சொந்தமான இறக்குமதி செய்யப்பட்ட 5 கார்களும், தேஜா சங்கர் என்பவருக்குச் சொந்தமான 2 கார்களும் அடையாளம் காணப்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது.
உதயநிதியின் TN 07 BM 1 கார் எங்கே?:
அதே போல ஸ்டாலினின் மகனான உதயநிதியின் ஹம்மர் காரை (பதிவு எண்: TN 07 BM 1) அடையாளம் காணவே சென்றதாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால், அப்போது ஸ்டாலின் வீட்டில் அந்தக் கார் இல்லை.
அழகிரியின் பண்ணை வீட்டிலும் ரெய்ட்:
எல்லோரும் ஸ்டாலின் ஸ்டாலின் என்றே பேசிக் கொண்டிருக்க, நேற்று சிபிஐ அதிகாரிகள் சென்ற இன்னொரு முக்கியமான இடம் திமுக எம்பி மு.க. அழகிரிக்குச் சொந்தமான சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு பண்ணை வீடு ஆகும். அழகிரி தரப்பும் ஒரு இறக்குமதி காரை வாங்கியுள்ளது. இதை அடையாளம் காணவும் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், இந்த விவரம் வெளியிலேயே வரவில்லை. ஆனால், அழகிரியின் பண்ணை வீட்டிலும் அந்தக் கார் இல்லை.
வழக்கே போடலைய்யா.. சிபிஐ:
இந் நிலையில், மத்திய அரசிடம் சிபிஐ தந்துள்ள விளக்கத்தில், இந்த கார் இறக்குமதி விவகாரத்தில் எந்த நபர் மீதும், எந்த அரசியல்வாதி மீதும், சிபிஐ வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ப.சிதம்பரம் 'குதித்தது' ஏன்?:
இந்த விவகாரத்தில் ரெய்ட் ஆரம்பித்தவுடனேயே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வழக்கத்துக்கு மாறாக தலையிடக் காரணம், இதில் தனது தலை நிச்சயம் உருளப் போகிறது என்பதால் தான். கார் இறக்குமதியில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து சிபிஐயிடம் புகார் தந்ததே அவரது நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறையின் துணை அமைப்பான Department of revenue intelligence தான்!!!












Click it and Unblock the Notifications