ஜாமீன் வழங்க யாரும் இல்லை… 73 கைதிகளை விடுதலை செய்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: நீதிமன்றம் ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராமல் சிறையில் வாடும் 73 விசாரணை கைதிகளை விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிறைகளில் ஏராளமான விசாரணைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் ஆண்டுக்கணக்கில் கூட தங்களின் வாழ்நாளை சிறையில் கழித்து வருகின்றனர். இவர்களுக்கு நீதிமன்றம் சார்பில் ஜாமீன் வழங்கினாலும் கூட உத்தரவாதம் தர யாரும் முன்வருவதில்லை.
இதேபோல விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்ட வீரராஜூ என்பவருக்கு ஜாமின் வழங்க யாரும் முன்வராததால் அவர் சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே வீரராஜூவை விடுதலை செய்யக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இவ்வகையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும்படி சட்ட உதவி குழுவினருக்கு உத்தரவிட்டது.
அவர்கள் சேகரித்த தகவலின் படி ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராத 272 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்படாமல் உள்ளது தெரிய வந்தது.
இவர்களைப் பற்றிய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப, 73 கைதிகளை சொந்த ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
மீதமுள்ள 199 கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு கடுமையாக இருப்பதாலும், அவர்களின் பழைய குற்றப் பின்னணியை கருத்தில் கொண்டும் விடுதலை செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications