'விலங்குகளைப் போல நடத்த வேண்டாம்!' - ரேணுகா சவுத்ரி மீது தமிழ் எம்பிக்கள் காட்டம்!

ரேணுகா சவுத்ரி தங்களை விலங்குகளைப் போல நடத்துவதாக பின்னர் திமுக, அதிமுக எம்பிக்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, இனியொரு முறை சபாநாயகர் நாற்காலியில் ரேணுகா அமரக் கூடாது என்றும் காட்டமாகக் கூறினர்.
நேற்றும் ராஜ்யசபாவில் ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழக எம்.பிக்கள் எழுப்பினர். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது என்றும் முழக்கமிட்டனர்.
அப்போது சபையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார். இந்த அமளியால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் சபை மீண்டும் கூடிய போது மீண்டும் அமளி ஏற்பட்டது. அப்போது அதிமுகவின் மைத்ரேயன் சபையை நடத்திக் கொண்டிருந்த ரேணுசா சவுத்ரியின் கைகளில் இருந்த பேப்பர்களை கிழித்து எறிந்தார். சபாநாயகர் மைக்குகளில் இரண்டும் இதில் உடைந்தது.
இத்தாலி வீரர்களை திரும்ப வரவைத்தது குறித்து பெருமையாக பேச முயன்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான குர்ஷித்துக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதனால் கோபமடைந்த ரேணுசா சவுத்ரி சில கடுமையான வார்த்தைகளைக் கூறிவிட்டு சபையை ஒத்தி வைத்தார். ஏற்கெனவே கொந்தளிப்பில் இருந்த தமிழக எம்.பிக்களை இது மேலும் ஆத்திரமூட்டியது. 'நாங்கள் என்ன விலங்குகளா... எப்படி எங்களை இவ்வளவு கேவலமாகப் பேசலாம்... இனி ஒரு முறை சபாநாயகர் இருக்கைக்கு ரேணுகா சவுத்ரி வரக்கூடாது,' என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார் மைத்ரேயன். திமுக எம்பிக்களும் கண்டனம் தெரிவித்தனர்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா மிகவும் ஆவேசத்துடன், ரேணுகாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டார். இதனால் அவருடைய உடல்நிலை பாதித்தது. தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று அவர் கூறியதால், உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
இடையில் அம்பிகா சோனி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நிலைமையை சகஜமாக்க முயன்றனர். பின்னர் ரேணுகா சவுத்ரி மீண்டும் இருக்கைக்கு திரும்பி வந்து, தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதன் பிறகுதான் ஓரளவு சகஜமானது நிலைமை.












Click it and Unblock the Notifications