மதுபான கிளப்பால் தமிழக அரசுக்கு ‘ஜாக்பாட்’.. வருமானத்தை பெருக்க விஜய் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10யை நிறுத்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதனை ஈடுசெய்ய சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மதுபான கிளப்புகளிடம் இருந்து அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை பெருக்க அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை செயலாளர் கே மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ''சென்னையில் உள்ள மதுபான கிளப்புகளில் ஆண்டு சிறப்பு உரிம கட்டணம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த கட்டண விகிதங்கள் 2026 ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் மதுபானம் விநியோகம் செய்யும் கிளப்புகளுக்கு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ரூல்ஸ் 1981ன்படி கிளப்புகளுக்கு ஆண்டுக்கு சிறப்பு உரிம கட்டணமாக இதுவரை ரூ.15 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதான் தற்போது ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிக்கு உட்பட்ட கிளப்புகளுக்கான சிறப்பு உரிம கட்டணம் ரூ.25 லட்சமாகும், 10 லட்சத்துக்கு குறைவான மக்கள்தொகை கொண்ட நகராட்சிக்கு உட்பட்ட கிளப்புகளுக்கான கட்டணம் ரூ.20 லட்சமாகவும், பேரூராட்சிக்கு உட்பட்ட கிளப்புகளுக்கு ரூ.15 லட்சமாகவும், பிற பகுதிகளிலும் ரூ.10 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் ரூ.10 ஆயிரமாக இருக்கும் விண்ணப்ப கட்டணம் மற்றும் ரூ.30 ஆயிரமாக இருக்கும் லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசுக்கான வருவாய் அதிகாரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க மதுபானம் விற்கும் கிளப்புகளிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் தமிழக அரசு முன்தேதியிட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனை தடுத்து நிறுத்துவதாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு பாட்டிலுக்கு ரூ.10 கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரூ.10 கூடுதலாக வசூலித்தால் முதலில் சஸ்பெண்ட் முதல் பணி நீக்கம் வரை நடவடிக்கை எடுப்பதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் டாஸ்மாக்கில் மதுபானம் எம்ஆர்பி விலையில் தான் விற்பனை செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். இதனால் தமிழக அரசுக்கான வருவாய் பாதிக்கப்படும் நிலையில் அதனை ஈடுசெய்ய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்பட மதுபானம் விற்கும் கிளப்பிற்கான சிறப்பு உரிம கட்டணத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications