உடம்பு சரியில்லை, ரெஸ்ட் எடுக்க மதுரைக்கு வந்துட்டேன்: அழகிரி

திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.
ஆனால், கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி செயற்குழு கூட்டம் நடக்கும் இன்று காலை தனது மனைவி காந்தியுடன் மதுரைக்கு வந்துவிட்டார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திமுக செயற்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மதுரைக்கு வந்துவிட்டீர்களே என்று அழகிரியிடம் கேட்டனர்.
அதற்கு அவர் கூறிய பதில்,
நான் மட்டும் தானா செயற்குழுக் கூட்டத்துக்குப் போகவில்லை.
250க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் பலர் இன்று கூட்டத்திற்கு வரவில்லை. அதில் நானும் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் மதுரையில் உள்ள எனது வீட்டில் ஓய்வெடுக்க வந்திருக்கிறேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் டெல்லியில் எனக்கு அலுவலகம் இல்லை. அலுவலகம் இல்லாததால் மதுரைக்கு வந்தேன் என்றார்.
ப.சிதம்பரம், வாசன் ஆகியோரை தனியாக சந்தித்ததாக செய்திகள் வந்ததே என்று கேட்டதற்கு, அவர்களை மட்டும் தானா சந்தித்தேன். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பலரையும் சந்தித்தேன். காங்கிரசில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களை நான் தொடர்ந்து சந்திப்பேன். நண்பர்களை நான் ஏன் இழக்க வேண்டும்? என்றார்.
முன்னதாக நேற்று கருணாநிதியை அழகிரி சந்தித்து, தன்னிடம் ஆலோசிக்காமல் மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications