வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்போம்… மாணவர்கள் எச்சரிக்கை
சென்னை: இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பிக் கொடுப்பது, ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது என போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ,மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிற நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி என மொத்தம் 60 கல்லூரிகளை சேர்ந்த மாணவர் பிரநிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து மாணவர் கூட்டமைப்பினர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும். இதற்காக மாணவர்கள் ஒன்றுகூடி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
சிங்களப் பொருட்களுக்கு எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. அதனால் மாணவர்களாகிய நாங்கள், சிங்களர்களின் பொருள்களை வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை என முடிவு எடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
வாக்காளர் அடையாள அட்டை
இலங்கைத் தமிழர்கள் விஷயத்திலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிற சம்பவத்திலும் மத்திய அரசு செவிசாய்க்காமல் மௌனமாக இருந்து வருகிறது. இதனைக் கண்டித்து மாணவர்களாகிய நாங்கள் வாக்காளர் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி கொடுக்க உள்ளோம்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1 கோடியே 65 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி கொடுப்பார்கள். எப்போது கொடுப்போம் என்பதை பின்னர் அறிவிப்போம். எங்களோடு சேர்ந்து பெற்றோர்களையும் வாக்காளர் அடையாள அட்டையை கொடுக்க வலியுறுத்துவோம்.
மத்திய அரசுக்கு ஒத்துழையாமை
இதேபோல மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்த உள்ளோம். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துவதில்லை. ரயில்களில் டிக்கெட் எடுக்கப்போவதில்லை.
இதற்கிடையே, சென்னை லயோலா கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தங்களது அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பை இன்று சென்னையில் வெளியிடுகின்றனர்












Click it and Unblock the Notifications