வேலூர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது
வேலூர்: அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்ததாக கூறி, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), சந்தீப்குமார் (24), நரேந்தர் ஜன்கு (26), சச்சின்குமார் (25), சதீஷ் (26) ஆகியோர், சென்ற 2011ம் வருடம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
பின்னர் இவர்கள் கடந்த ஆண்டு பயிற்சிக்காக தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் இவர்களின் கையொப்பம் மற்றும் தடயங்களை சேகரித்து சிம்லாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இவர்கள் எழுத்துத் தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்ததையடுத்து, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ஜார்ஜ், 5 பேரையும் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.












Click it and Unblock the Notifications