இடியுடன் வந்த கோடை மழை... மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்

ஏப்ரல் மே மாதங்களில்தான் வெயில் வாட்டி எடுக்கும். ஆனால் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் கரண்ட் கட் வேறு வியர்வையில் நனைய வைத்து புழுக்கத்தை அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் நெல்லையில் நேற்றிரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது.
நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இப்போது கோடைமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று பகலில் நல்ல வெயில் அடித்த போதிலும் பிற்பகலில் இருந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. நெல்லை சந்திப்பு, டவுன் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தின் அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 79.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 229 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 91.04 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 47 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் மாதம் பெய்த மழை ஆறுதலாக இருந்தது.
இதேபோல் தேனி மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. தேனி பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய ஊர்களில் மிதமான மழை பெய்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருப்பூர் நகரில் காலை நேரத்தில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசியது. எனினும் சின்ன தூறல் விழாமல் மக்களை ஏமாற்றியது. அதே சமயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடியுடன் மழை பெய்தது. பொள்ளாச்சியில் பலத்த மழை பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications