காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களைப் பார்த்து கையை நீட்டி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் எச்சரித்துள்ளார்.
தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் நேற்று பேரவையில் சபாநாயகர் அறிவித்தார்.
இதனைக் கண்டித்து தேமுதிக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சட்ட பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி வெளிநடப்பு செய்தபோது ஆளும்கட்சி உறுப்பினர்களை நோக்கி கையை நீட்டி ஏதோ பேசினாராம். வெளியே வந்த அவர் ஆளும் கட்சிக்கு எதிராக பேட்டியளித்தார். தேமுதிக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ விஜயதாரணியின் செயலுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, பேரவை மரபுக்கும் மாறாக விரலை நீட்டி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணியை எச்சரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் யாரும் பேரவை மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது என பேரவைத் தலைவர் தனபால் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications