ஜூவி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு போட்டார் ஜெ.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ் மீது முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் தொடந்துள்ள நிலையில் நேற்று புதிதாக ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"மார்ச் 20ம் தேதி வெளிவந்த ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் ‘மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெயலலிதா? ‘என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்தது.
முக்கிய கட்சி தலைவர் ஒருவர் இன்னொரு தலைவரிடம் பேசும்போது இந்த மாணவர் போராட்டத்தை அந்த அம்மாவே தூண்டிவிடுவது போல் தெரிகிறது. மத்திய அரசாங்கத்துக்கு இதன்மூலம் நெருக்கடி கொடுக்க நினைக்குது என்று சொன்னாராம்' என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எந்த விளக்கமும் கேட்காமல் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் உண்மைக்கு புறம்பாக இந்த செய்தியை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 500, 501ன் கீழ் ஜூனியர் விகடன் ஆசிரியர், வெளியீட்டாளர், பதிப்பாளர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாகிறார்கள்.
எனவே, அவர்கள் மீது இந்த சட்டப் பிரிவுகளின்கீழ் அவதூறு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications