ஊருல தண்ணி இல்லை.. கட்டிக்க பொண்ணு இல்லை.. புலம்பும் குஜராத் கிராமத்து ஆண்கள்
ராஜ்கோட்: குஜராத்தின் டேடன் என்ற கிராமம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இங்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்பதால் இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு் பெண் கொடுக்க மற்ற பகுதியினர் தயங்குகிறார்களாம்.
இந்த கிராமமானது அம்ரேலி என்ற ஊருக்கு அருகே உள்ளது. டேடன் கிராமத்தில் மகா மோசமான வறட்சி நிலவுகிறது. தண்ணீர் சுத்தமாக இல்லை. இதனால் இந்த ஊரைச் சேர்ந்த பெண்களை விட ஆண்கள்தான் ரொம்பச் சிரமப்படுகின்றனர். காரணம், இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்களாம்.
கடந்த 2 மாதத்தில் மட்டும் தண்ணீர்ப் பிரச்சினையைக் காரணம் காட்டி நான்கு இளைஞர்களின் திருமணம் நின்று போய் விட்டதாம். இந்த ஊரில் மொத்தம் 12,000 இளைஞர்கள் உள்ளனராம்.
அம்ரேலி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதே வறட்சிக்குக் காரணமாம். அங்கு கடந்த 2012ல் 56 சதவீத சராசரி மழை பெய்தது. ஆனால் இது 2011ல் 93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அம்ரேலி நகருக்கு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதாம். சில பகுதிகளில் அதுவும் கூட கிடையாதாம். இதனால் தண்ணீருக்காக கடும் மோதல்களும் நடப்பது சகஜமாகியுள்ளதாம்.
டேடன் கிராமத்தில் 5 கிலோமீட்டர் தூரம் போய் தினசரி மக்கள் தண்ணீர் பிடிக்கிறார்களாம். இதனால்தான் இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications