நீளமுடி காணிக்கைக்கு 5 இலவச லட்டு திட்டம் ரத்து... எதிர்ப்பால் பின்வாங்கியது தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 31 அங்குலம் நீளமுள்ள தலைமுடியை காணிக்கையாக செலுத்தும் பக்தர்களுக்கு 5 இலவச லட்டுகள் வழங்குவதாக சமீபத்தில் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக முடி காணிக்கை செலுத்தும் சுதர்சன சத்திரத்தில் சிறப்பு கல்யாண கட்டை உருவாக்கப்பட்டது. லட்டு டோக்கன் வழங்க சிறப்பு கவுண்டர்களும் தயார் செய்யப்பட்டது.
தேவஸ்தானத்தின் இந்த புதிய திட்டத்துக்கு மடாதிபதிகள் மற்றும் சில ஆன்மீகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூறும்போது,
இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கைக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி சொரூபனந்தா நேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார். உனக்காக என்னை அலங்கோலப்படுத்திக் கொள்கிறேன் என வேண்டி பக்தர்கள் அழகான தலைமுடியை மழித்து மொட்டை போட்டுக் கொள்கிறார்கள். இலவச லட்டு வழங்குவதன் மூலம் ஆண்டவனுக்கு செலுத்தும் காணிக்கைக்கு விலை நிர்ணயிப்பது போல் உள்ளது' என்று கடுமையாக விமர்சித்தார்.
திருமலை தேவஸ்தானம் ஒரு வியாபார நிறுவனம் போல் ஆகி விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மடாதிபதிகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பால் ‘முடி காணிக்கைக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருந்து தேவஸ்தானம் பின்வாங்கியது. திட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் உடனடியாக அறிவித்துள்ளார்
திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். இந்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு பல கோடி வருமானம் கிடக்கிறது. வெளிநாடுகளில் இந்த முடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நீளமான முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களை உற்சாகப்படுத்த இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் அறிவித்தது.












Click it and Unblock the Notifications