மு.க. அழகிரியை வைத்து அதிமுக போடும் தேர்தல் கணக்கு! திரும்புகிறது 2001?

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து போனார் மு.க. அழகிரி. மற்ற திமுக அமைச்சர்களுடன் சேராமல் தனியே போய் ராஜினாமா கொடுத்தார். அத்துடன் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றோரை தனியே சந்தித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தின் போது 'சென்னையில்' இருந்து மதுரைக்கு போய் முகாம் அடித்திருந்தார். இப்படி திமுகவில் கலகக் குரலாக தம்மை வெளிப்படுத்தி வருகிறார் மு.க. அழகிரி.
இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்பும் கூட அழகிரிக்கான போலீஸ் பாதுகாப்பை தொடர அதிமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் லோக்சபா தேர்தல் காலம் வரை அழகிரி முகாம் மீது எந்த வழக்கும் போட வேண்டாம் என்றும் அழகிரி தரப்பு வழக்குகளில் கடுமை காட்ட வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டிருக்கிறlது என்கிறார்கள்.
அதிமுக அரசுக்கு மு.க அழகிரி மீது அப்படி என்ன கரிசனை என்றால் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களேபரம் சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்தத் தேர்தலில் திமுக தலைமையோடு மோதிக் கொண்டிருந்த அழகிரி தமக்கும் செல்வாக்கு இருக்கு என்பதைக் காண்பிப்பதற்காக திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கலகமூட்டினார். அவர் நினைத்தபடியே மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் தோற்றுப் போயினர்.
இதனால் எப்படியும் வரும் லோக்சபா தேர்தலிலும் திமுகவுக்கு அழகிரி ஆப்படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் மீதான இறுக்கத்தை தளர்த்தியிருக்கிறதாம் அதிமுக அரசு. தலைமை மீதான கோபத்தில் லோக்சபா தேர்தலில் ஏதாவது கலாட்டா செய்வதன் மூலம் ரிசல்ட் தங்களுக்கு சாதகமாகிவிடும் என்பதுதான் அதிமுகவின் கணக்காக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications