எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தையே....
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தையே 10 நாட்களுக்கு பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சி வேறு எப்போதாவது நடந்தது உண்டா? அதுவும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.
13-11-2008ல் திமுக ஆட்சியில் நான் அவையில் இல்லாத நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அறிந்து அவர்கள் மின்சார வாரியம் பற்றிய விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டு விட்ட காரணத்தால், அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே என்று எண்ணி நானே எதிர்க்கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியில் பேசிட முயற்சித்து அது கிடைக்காத காரணத்தால் ஆளும் கட்சியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்று அதிமுகவினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன்.
மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியில் பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களை கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையில் அழைப்பு விடுக்கவும் கேட்டுக் கொண்டேன். அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார். ஆனால், இத்தனைக்கும் பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள் அவைக்கு வரவும் இல்லை. மின்சார விவாதத்தில் கலந்து கொள்ளவும் இல்லை.
ஆனாலும் அண்ணா கற்றுக் கொடுத்த அந்தப் பண்பாட்டுடன் நாம் நடந்து கொண்டோம் என்ற மன ஆறுதல் எனக்குக் கிடைத்தது.
25-3-1989. 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 3ம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று, நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கிய போது நடந்தது என்ன? எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எழுந்து, முதலமைச்சர் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவர் நிதிநிலை அறிக்கை படிக்கக் கூடாது என்று கூறி, என் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கிட முற்பட்டார். அவருக்குத் துணையாக அதிமுக உறுப்பினர்கள், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு படிக்காதே, படிக்காதே என்று கூச்சலிட்டனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என் கையிலிருந்த நிதி நிலை அறிக்கைப் புத்தகத்தைப் பிடித்திழுத்து கிழித்தெறிந்தார். அதைத் தடுக்க முனைந்த போது என் முகத்தில் குத்தி, மூக்குக் கண்ணாடி கீழே நொறுங்கி விழுந்தது.
அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் ஒலிபெருக்கிக் கம்பியால் தாக்கி, ரத்தம் ஒழுகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வளவு பெரிய சம்பவத்திற்கே அப்போது என்ன தண்டனை வழங்கப்பட்டது தெரியுமா? கலவரம் செய்த அதிமுக உறுப்பினர்களை ஒரு வார காலம் தற்காலிக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் 27-3-1989ல் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவராக இருந்த குமரிஅனந்தன், அந்த தற்காலிக நீக்கத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையொட்டி, நான் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நான் அணுகுகிறேன். அன்றைய தினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக, கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டேன். இது தான் திமுக. இதனை அப்போது சி.சுப்ரமணியம் ஏடுகள் வாயிலாகப் பாராட்டியிருந்தார்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் எவ்வெப்போது எப்படியெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதற்காக இந்த நிகழ்ச்சிகளை எழுதியுள்ளேன். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே எனக்கு கிடைத்த தகவல்படி தற்போது தேமுதிக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை ஓராண்டிலிருந்து 6 மாதமாகக் குறைத்திருக்கிறார்களாம். இதுவும் அதிகபட்சத் தண்டனைதான்.என்னுடைய இந்த விளக்கங்களை படித்துப் பார்த்த பிறகாவது, அதிமுக ஆட்சியினர் தேமுதிக உறுப்பினர்கள் மீது தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கை பற்றி மறுபரிசீலனை செய்து, அதனை ரத்து செய்வதற்கோ அல்லது நாட்கள் கணக்கில் அல்லது வாரக் கணக்கில் குறைத்து அறிவிப்பதற்கோ முன் வருவார்கள் என்று நம்புகிறேன். முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications