10-ம் வகுப்பு தமிழ் 2ம் தாள் தேர்வில் குழப்பம்: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் 2ம் தாளில் ஒரு கேள்வியில் ஏற்பட்ட குழப்பத்தினால் முழு மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. நேற்று தமிழ்முதல்தாள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இன்று தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு கேள்விக்கு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
கேள்வி எண் 38-க்கான படிவம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தரப்படவில்லை.
இது குறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூறியதாவது-"28.03.2013 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் வினா எண். 38-க்கு வங்கி படிவம் வினாத்தாளுடன் இணைக்கப்படாததால் அவ்வினாவிற்குரிய விடையினை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் வினா எண். 38 என எழுதி வங்கிப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விபரங்களை மட்டும் வரிசை எண்ணிட்டு எழுதிட உரிய அறிவுரைகள் அனைத்து மையங்களில் உள்ள மாணவர்களுக்கு, அறை கண்காணிப்பாளர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வினா எண். 38 தொடர்பாக தமிழ் இரண்டாம்தாள் மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்களுக்கு உரிய அறிவுரைகள் விடைக்குறிப்புகள் மூலம் வழங்கப்பட்டு, மேற்படி வினாவினை எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 (ஐந்து மதிப்பெண்கள்) வழங்கப்படும் என்றும் இதனால் மாணவர்கள் எவ்வித குழப்பமோ கலக்கமோ அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று கூறியுடள்ளார்.
இருப்பினும், இந்த தகவல்கள் சில தேர்வு மையங்களில் உள்ள மாணவர்களுக்கு, உரிய நேரத்தில் உரிய முறையில் தெரிவிக்கப்படாததால், மாணவர்கள் நேரமின்மை போன்ற பல இன்னல்களுக்கும், குழப்பங்களுக்கும் ஆளாகினர்.












Click it and Unblock the Notifications