ஈழத் தமிழருக்கு ஆதரவாக திருநங்கைகள் உண்ணாவிரதம்!
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக பல்வேறு வடிவங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தினேஷ் ஆகியோர் தலைமையில் இன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எந்த மாநிலத்திலும் இலங்கை வீரர்கள் விளையாட கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களும் பொது மக்களும் இன்றும் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.