ஈஸ்டர்.. தமிழகமெங்கும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, உற்சாக கொண்டாட்டம்
சென்னை: இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. வாடிகன் சிட்டியில் புதிய போப்பாண்டவர் சிறப்பு்ப் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது. இந்த உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
இன்று ஈஸ்டராகும். இதையொட்டி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். தமிழகத்திலும் ஈஸ்டர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று நள்ளிரவு பாஸ்கர் திரு விழிப்பு திருப்பலி நடந்தது. அதிகாலை கிறிஸ்துவர்கள் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியப்படி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
ஏசு உயிர் எழுந்த நிகழ்வுகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நடத்தி காட்டப்பட்டது. அதை தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும் நடந்தது. இதில் அனைவருக்கும் திவ்ய ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் இன்று அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடை பெறுகிறது.
இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும், சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்திலும் ஈஸ்டர் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications