ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஹோலிக்கு முன்பே தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது.. சுப்ரீம் கோர்ட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இடைக்காலத் தடை பெற்று இயங்கி வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பட்நாயக், கோகலே ஆகியோர் கொணட் அமர்வு நாளை ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலையை மார்ச் 30 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடச் செய்துள்ளது என்பதை இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நீதிபதி பட்நாயக் குறுக்கிட்டு, "ஸ்டெர்லைட் குறித்த தீர்ப்பு ஹோலிப் பண்டிகை விடுமுறைக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது. எனவே, இப்பொழுது இதுகுறித்த அறிக்கை எதுவும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை," என்றார்.
அப்போது கோர்ட்டில் ஆஜராகியிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுந்து, நான் நடந்ததைக் கூற விரும்புகிறேன். மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக டை ஆக்சைடு நச்சுப் புகையால் தூத்துக்குடி மக்கள் கடற்கரை ஓரத்திலும், பல இடங்களிலும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிக்கு ஆளானார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. தூத்துக்குடி மாநகரின் அனைத்துக் கடைகளையும் வியாபாரிகள் மூடிவிட்டனர். மீனவர்கள் கடலில் தொழிலுக்குச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கானோர் போராடி கைதானோம். நானும் அதில் பங்கேற்றேன். மார்ச் 30 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிவிட்டது என்பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்," என்றார்.
அதற்கு நீதிபதி பட்நாயக் குறுக்கிட்டு, பத்திரிகைகளில் பார்த்தோம் என்று சொன்னதோடு, "தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது; சுற்றுச் சூழலைக் கண்காணிப்பதற்கும் அதுகுறித்து எவ்விதமான ஆணைகளைப் பிறப்பிப்பதற்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்பதையும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்," என்றார்.