குஜராத்தை 'இந்து மாநிலமாக' அறிவிப்போம்: விஸ்வ இந்து பரிஷத்

இந்துக்களின் முன்னேற்றம் என்ற கோஷத்துடன் விஸ்வ இந்து பரிஷத் நேற்று புதிய இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பின் பொன் விழாவையொட்டி குஜராத்தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கும் தொகாடியாவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் விஎச்பி சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் குஜராத்தின் 18,000 கிராமங்களிலும் விஎச்பியின் கிளைகள் துவக்கப்படும். 2015ம் ஆண்டில் குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்.
இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்துக்களின் பாதுகாப்பும், இந்துக்களின் வளர்ச்சியும் இந்துக்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் முழு இந்துக்களாக மாற வேண்டும், தீவிர இந்துக்களாக மாற வேண்டும். அப்போது தான் ராமர் கோவிலை நம்மால் கட்ட முடியும்.
இந்துக்களின் தலைவர்களை எங்களது தலைவர்களாக அங்கீகரிப்போம் என்றார்.
நரேந்திர மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் பிரதமராக கனவு காணலாம் என்றார் தொகாடியா.
பாஜகவின் உயர்மட்ட நாடாளுமன்றக் குழுவில் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். இது குறித்தெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.
விஎச்பியின் செயலாளர் வினாயக்ராவ் தேஷ்பாண்டே பேசுகையில், குஜராத்தில் நமது இயக்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் 10,000 கமிட்டிகள் இருந்தன. இப்போது அது 6,000 ஆகக் குறைந்துவிட்டது என்றார்.
இந்தக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ருதியும் கலந்து கொண்டார். இவரது மரணத்துக்கு மோடியை ஜாக்ருதி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications