யாராக இருந்தாலும் எங்களுடன் கூட்டு சேர்ந்தாதான் 40 தொகுதிகளும் கிடைக்கும்- சுதீஷ்
மயிலாடுதுறை: எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, வருகிற லோக்சபா தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியே 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தேமுதிக இளைஞர் அணிச் செயலாளறும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை வந்த அவர் அங்கு புதிய தேமுதிக எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மயிலாடுதுறை சின்னக் கடை தெருவில் மக்கள் பணிக்காக புதிய எம்.எல்.ஏ. அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களது அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது கிடையாது. அது போன்ற செயல் தமிழகத்தில் நடந்தது இல்லை.
இதற்கு மாறாக தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
எனவே, இந்த செயலை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது. இதனை நாங்கள் சட்டப்படி நீதிமன்றத்தில் அனுகி வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெறுவோம். இந்த புதிய அலுவலகத்தில் தொகுதி மக்களின் கோரிக்கை பணிகள் நிறைவேற்று தரப்படும். இந்த அலுவலகம் இன்று முதல் தொடர்ந்து செயல்படும்.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. வுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கிறதோ, அந்த கட்சி தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.