ஈழத் தமிழருக்கா நடிகர் சங்க உண்ணாவிரதம்: ரஜினி, அஜீத், சூர்யா, சரத்குமார் பங்கேற்பு
சென்னை: ஈழத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் அறிவித்த உண்ணாவிரதம் இன்று நடந்தது. அதில் ரஜினிகாந்த், கமல், அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகுமார், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே அறிவித்தபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகல் 11.30 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். உண்ணாவிரதம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

பாலச்சந்திரன் ஏற்படுத்திய உணர்வலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது. மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாலச்சந்திரன் படங்களை ஏந்தியபடி ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து வருகின்றனர்.

தமிழீழம் ஒன்றே தீர்வு
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கூண்டிலேற்றி தண்டிக்க கோரி வருகின்றனர். தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்-நடிகைகளும் இன்றுஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 9 மணிக்கு நடிகர் சங்க வளாகத்தில்
இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது. உண்ணாவிரதம் தொடங்கியதும் முதல் நபராய் வந்தார் நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார்.

திரண்ட நட்சத்திரங்கள்
நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், பிரசாந்த், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண் விஜய், கே. பாக்யராஜ், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், டெல்லி கணேஷ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார் மன்சூரலிகான், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் வந்தனர்.
கலைப்புலி தாணு, வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நடிகைகளில் தன்ஷிகா
முன்னணி நடிகைகளில் தன்ஷிகாதான் முதலில் வந்தார். ரேகா, ராதிகா சரத்குமார், ஊர்வசி, அம்பிகா, நளினி, மோனிகா ஆகிய நடிகைகளும் வந்தனர்.

இன்று கோலிவுட்டுக்கு உலகுக்கு விடுமுறை
நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் இருந்தார்கள். அவர்கள் உண்ணாவிரத்ததில் பங்கேற்கும் வகையில் அனைத்து துறை பணிகளும் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பிவிட்டனர்.

அனைத்து அமைப்புகளும்..
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றன.

இரண்டாயிரம் பேர்
உண்ணாவிரத போராட்டத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. கடும் வெயில் கொளுத்திய நிலையிலும் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications