மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணை கற்பழித்து ரூ.40,000க்கு விற்ற கோவில் பூசாரி
சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் திருமணமான 33 வயது பெண்ணை கோவில் பூசாரியும் அவரது உதவியாளரும் சேர்ந்து கற்பழித்துவிட்டு அவரை ரூ.40,000க்கு சகோதரர்கள் 3 பேருக்கு விற்றனர். அந்த சகோதரர்களும் அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் கவார் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி 5 வயது குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணை கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி முதல் காணவில்லை. இந்நிலையில் திகம்கார் மாவட்டம் பிப்ரா கிராமத்தில் அவரை அவரது சகோதரர் கண்டுபிடித்தார். அவரிடம் அப்பெண் தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் 17ம் தேதி கோவில் பூசாரி பாலா பிரசாத் ஷுக்லாவும், பதர்வா கிராமத்தைச் சேர்ந்த அவரது உதவியாளர் தேவேந்திர ஷுக்லாவும் சேர்ந்து கடத்தி கற்பழித்துள்ளனர். அதன் பிறகு ஜனவரி 30ம் தேதி அவரை பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த விம்லேஷ் யாதவ், பப்பு யாதவ் மற்றும் விரேந்திர யாதவ் ஆகிய சகோதரர்களிடம் ரூ.40,000க்கு விற்றுவிட்டனர். அந்த சகோதரர்கள் 3 பேரும் அப்பெண்ணை சீரழித்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண் பமிதா காவல் நிலையத்தில் அந்த 5 பேர் மீதும் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் தேடி வருகின்றனர்.