காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எப்போது?: மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் பதில்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி சட்ட ஆலோசனை நடைபெற்று வருவாதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர்மன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த தீர்ப்பை காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மூலம் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். ஆனால் கர்நாடகத்தின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் மே மாதம் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தான் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக என்பது தமிழக விவசாயிகளின் புகாராக இருக்கிறது.
இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்திடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்ட போது, காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இந்த சட்ட ஆலோசனைக்குப் பின் அந்த வாரியம் அமைக்கப்படும் என்றார்.