திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ரூ. 4000 லஞ்சம்: 3 பேர் சஸ்பெண்ட்
திருப்பதி: திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் லஞ்சம் கேட்டதாக மூன்று ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புகார்களை தெரிவிக்க பக்தர்களுக்கு இலவச தொலைபேசி எண்களையும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் குறைவில்லாத கூட்டம் வரும் கோவில் திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் பல லட்சம் பேர்வரை சுவாமி தரிசனத்திற்கு கூடுவார்கள்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே திருமலைக்கு கை குழந்தையுடன் வருபவர்கள், ஊனமுற்றோர், முதியவர்கள் ஆகியோர் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்வதற்காக 'சுபதம் தரிசனம்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோவில் மகா வாயில் வழியாக நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் கனடா நாட்டில் வசிக்கும் இந்திய தம்பதிகள் நேற்று கை குழந்தையுடன் கோவிலுக்கு வந்தனர். சுபதம் கியூவில் தரிசனத்துக்கு காத்து நின்ற போது அவர்களிடம் கோவில் ஊழியர்கள் ஜெகநாதம், மோகன், சந்திரா ஆகியோர் அணுகி சாமி அருகில் நின்று தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறோம்' எனக்கூறி ரூ.4 ஆயிரம் பணம் கேட்டதாக தெரிகிறது.
இவர்கள் பேரம் பேசுவதை பாதுகாப்பு அரசு அதிகாரி சிவய்யா கண்காணிப்பு கேமிராவில் பார்த்துவிட்டார். உடனடியாக அங்கு வந்த அவர், கனடா தம்பதிகளிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த தம்பதிகளை இலவசமாக சுபதம் தரிசன வரிசையில் அனுப்பி வைத்த அவர் லஞ்சம் கேட்ட 3 ஊழியர்களையும் கைது செய்தார்.
விசாரணைக்கு பின்னர் 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இலவச தொலைபேசி எண்
மேற்கண்ட நடவடிக்கையை எடுத்த கண்காணிப்பு அதிகாரி அசோக்குமார் கூறும் போது, இடைத்தரகர்களிடம் பக்தர்கள் ஏமாற வேண்டாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் 18 00 42 54 41 41 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்' என்றார்.












Click it and Unblock the Notifications