யாருடன் கூட்டணி? தவிக்கும் கேப்டன்! தேர்தல் புறக்கணிப்பு நடக்குமா?

அதிமுக அணியில் இருந்து விலகிய நிலையில் காங்கிரஸ், திமுக அணியில் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள்லாம் என்பதுதான் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கணக்காக இருந்தது. பல்வேறு பிரச்சனைகளில் தேமுதிகவும் திமுகவும் இணைந்தே செயல்பட வேண்டிய சூழல் வந்தது. திமுகவின் ஆட்சிக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்கவில்லையே? என்று நற்சான்று பத்திரமெல்லாம் கூட வழங்கினார் விஜயகாந்த். தேமுதிகவினர் மீதான முதல்வர் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கைவிட திமுகவும் தயங்கவில்லை.
இந்நிலையில்தான் தேமுதிகவின் கனவு டமாரென உடைந்தது. தமிழீழப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க காங்கிரஸ் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸூடனான உறவை திமுகவும் முறித்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது.
இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருக்கும் அதில் போய் சேரலாம் என நினைத்திருந்த விஜய்காந்த்துக்குத் தான் மிகப் பெரிய அதிர்ச்சி.
தேமுதிகவின் வருகையை திமுக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. திமுகவின் நிலையை முன்கூட்டியே அறிவிப்பது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் வாடிக்கை. இந்த விவகாரத்திலும் கூட தேர்தலை புறக்கணித்தால் மக்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள் என்று நேற்று வீரமணி அட்வைஸ் செய்திருக்கிறார். இதுதான் திமுகவின் நிலையாகவும் அதாவது தேமுதிகவின் அறிவிப்பை எரிச்சலோடுதான் திமுக பார்த்து வருகிறது என்றுதான் அர்த்தப்படுத்தப்படுகிறது.
ஆனால் தேமுதிகவோ காங்கிரஸ் இல்லாத நிலையில் வலுவற்ற திமுகவை நம்பி கூட்டணிக்குப் போனால் சரியாக வருமா? என்று கணக்குப் போடுகிறது. அதே நேரத்தில் இப்பவே திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் கணிசமான தொகுதிகளைக் கேட்கலாம். தேர்தல் நேரத்தில் மேலும் பல எம்.எல்.ஏக்களை அதிமுக கபளீகரம் செய்துவிட்டால் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக திமுக குறைத்துவிடும் என்ற ஒரு குமுறல் தேமுதிகவில் அதிகமாக கேட்கவும் முடிகிறது.
திமுகவையே நம்பிப் போக முடியாது எனில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பது 'தற்கொலை'க்கு சமமானது என்றும் தேமுதிக கருதுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இன்னமும் தங்களுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருக்கிறது என்று கருதி விஜயகாந்த் எப்படியும் நம்முடன் வந்துவிடுவார் என தேமுதிகவுடன் லாபியில் ஈடுபட்டு வருகிறது..
இப்படியான ஒரு குழப்பமான இடியாப்பச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான ஒரு அஸ்திரமாக தேர்தல் புறக்கணிப்பு எனும் கோஷத்தை விஜயகாந்த் முன்வைத்திருக்கிறார். ஆனாலும் மிகவும் உஷாராக 'அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டால் தேர்தல் புறக்கணிப்பு என்று பாதுகாப்பு கவசத்தை போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் நிச்சயமாக தமது கட்சி தேர்தல் புறக்கணிப்பை மேற்கொள்ளாது.. ஏதோ ஒரு கட்சியுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்கும் என்பதுதான் தேமுதிகவினர் சமாதானமான எதிர்பார்ப்பு.
தேமுதிகவுக்கு இது ஒரு அக்னி பரீட்சைக் காலம்!












Click it and Unblock the Notifications