மெட்ராஸ்ல இருந்து எப்ப பார்த்தாலும் நோட்டீசு.. நோட்டீசு.. அதிருப்தியில் அழகிரி ஆதரவாளர்கள்!
மதுரை: திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களுக்கு அக்கட்சி மேலிடம் அடிக்கடி விளக்க நோட்டீசு அனுப்புவதால் மதுரை திமுகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரையில் கடந்த 30-ந்தேதி திமுக பொருளாளர் மு.க .ஸ்டாலினின் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தை அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அமைப்புச் செயலாளர் இளங்கோவன், மு.க.அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, அவைத்தலைவர் இசக்கி முத்து, துணைச் செயலாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்ட 15 பேருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியை புறக்கணித்ததற்காகவும் மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு அப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.தற்போது மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் விளக்க நோட்டீசால் மதுரை தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டீசு தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் கட்சி தலைமைக்கு விளக்கம் கொடுக்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் மணி விழா கூட்டம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடத்தவும் இல்லை. யாருக்கும் உரிய தகவலும் தெரிவிக்கவில்லை என்பது மு.க. அழகிரி ஆதரவாளர்களின் கருத்து. இதேபோல் நிகழ்ச்சி பற்றி எங்களுக்கு உரிய முறையில் தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் மு.க.அழகிரி பிறந்த நாள் விழாக்களை ஸ்டாலின் புறக்கணித்த நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை இதுவரை ஏன் விளக்க நோட்டீசு அனுப்பவில்லை என்பதும் அவர்களின் கேள்வி.
அதே நேரத்தில் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதும் திமுக தொண்டர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.