அத்வானி தலைமையில் அடுத்த மத்திய அரசு: விஜய் கோயல் பேச்சால் சர்ச்சை
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அத்வானி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று டெல்லி மாநில பாஜக தலைவர் விஜய் கோயல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா உதயமான நாள் இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானிம் டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் கோயல் வாஜ்பாயையும் அத்வானியையும் புகழ்ந்து பேசினார். அத்துடன் மத்தியில் அடுத்த அரசை வேறு யாருமல்ல எல்.கே. அத்வானி தலைமையில்தான் அமைப்போம் என்று கூறி பற்ற வைத்திருக்கிறார்.
பாஜகவில் அமைதியாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார் எல்.கே.அத்வானி என்று கூறப்பட்டு வரும் நிலையில் கோயலின் பேச்சு அக்கட்சியில் பிளவை தொடங்கி வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தும் வகையில்தான் நாடாளுமன்றக் குழுவில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் தலைமையில்தான் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கக் கூடும் என்ற நிலையில் விஜய் கோயல் பேச்சு அக்கட்சியில் சர்ச்சையை உருவாக்கி வைத்திருக்கிறது.