ராகுல் பிரதமராவதை எந்த நேரமும் வரவேற்கிறேன்! - மன்மோகன் சிங்
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராகவும், பிரதமர் பதவி மூலம் மன்மோகன்சிங் ஆட்சிக்கு தலைவராகவும் உள்ளனர்.
‘இந்த இரு அதிகார மையங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியாது, வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்தார்.
மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டி?
இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவின் இடையே நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: மீண்டும் பிரதமர் பதவி வகிக்க உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கருதுகிறீர்களா?
பதில்: நான் மீண்டும் பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இல்லை என்றும் சொல்வதற்கில்லை.
கேள்வி: திக்விஜய் சிங் கருத்தை அடுத்து இரு அதிகார மைய பிரச்சினை விவாதப்பொருளாகி இருக்கிறதே?
பதில்: இதெல்லாம் ஊடகங்களின் வேலை. இது ஒன்றுக்கும் பலனற்ற விவாதம் (Useless).
ராகுல் பிரதமர்?
கேள்வி: ராகுல் காந்தி பிரதமர் ஆவதை வரவேற்கிறீர்களா?
பதில்: ஓ... ஆமாம். அவரே பிரதமராக எப்போதும் என் ஆதரவு உண்டு.
கேள்வி: டெல்லியில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு எப்படி அமைந்திருந்தது?
பதில்: மிகச் சிறப்பாக இருந்தது.
சிஐஐ கூட்டத்தில் பேசும்போது, அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராவது குறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.