ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தர்மயுத்தம்... அனைவரும் பங்கேற்க வைகோ அழைப்பு!

இது குறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது.
குஜராத் மாநிலமும், கோவாவும் இந்த ஆலையை அனுமதிக்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த உயிர் குடிக்கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது. இந்த ஆலையை அகற்றக்கோரி, தூத்துக்குடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆட்டோ, வேன், கார், லாரி ஆகிய வாகனங்களும் அன்று இயங்காது என போராட்டக்குழு அறிவித்து உள்ளது.
மக்களுக்காக நடத்தப்படும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கம், மத்தியச் சங்கம், வியாபாரிகள் சங்கம், மீனவர் சங்கம், வணிகர்கள் சங்கம், அரிமா சங்கங்கள், வாகன ஓட்டுனர் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என 60-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகள் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், இந்த தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனைவரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்" என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications