ஈழம் கிடைக்கும்.. தமிழனை தனியாக பிரிக்காதீர்கள்... லண்டனில் முழங்கிய பாரதிராஜா
லண்டன்: தமிழனை இனி ஈழத்தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன் என பிரித்து பார்க்காதீர்கள். தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைவோம். கண்டிப்பாக ஈழம் கிடைக்கும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
இலங்கை அரசின் மீது ஐ.நா. சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கவும் லண்டனில் மிகப்பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கிய பேரணியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

பாரதிராஜா பங்கேற்பு
லண்டன் பேரணியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. எஸ்.ஜெயானந்தன்மூர்த்தி, இயக்குநர் பாரதிராஜா, தமிழ் இணையோர் அமைப்பை சேர்ந்த பாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தனி ஈழம் கிடைக்கும்
பேரணியில் பேசிய பாரதிராஜா, கண்டிப்பாக ஈழம் கிடைக்கும் என்றார். தமிழனை இனி ஈழத்தமிழன், இந்தியத் தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன் என பிரித்து பார்க்காதீர்கள். தமிழர்கள் எல்லோரும் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

உருவ பொம்மை எரிப்பு
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்ட பேரணியில் இலங்கை அரசுக்கு எதிராக முழங்கள் எழுப்பட்டன. முடிவில் பேரணியில் இழுத்து செல்லப்பட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர் பிரிட்டோ வழங்கிய உரையின் ஒலிப்பதிவும், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஷ் தமிழகத்தில் இருந்து வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம் பெற்றது.












Click it and Unblock the Notifications