கட்டியதோடு சரி, அடிப்படை வசதிகளே இல்லை... 200 என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
சென்னை: எந்தவிதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத 200 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தவிர அதிக அளவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கல்லூரிக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதுப் பிக்க வேண்டும்.
கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கான அங்கீகாரத்தை வழங்க பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 520 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார பரிந்துரை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் 200 கல்லூரிகளில் அரசு தெரிவித்த கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும் தெரியவந்தது.
இதையடுத்து அக்கல்லூரிகளுக்கு உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், தகுதியான பேராசிரியர்களை நியமித்து மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான கடிதத்தை எங்களுக்கு அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டு 300 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார்.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகளில் முறையான மைதானம் இல்லாதது, பணியிட காலியிடங்கள் அதிகம் இருப்பது, லேப் வசதி சரியாக இல்லாதது, கேன்டீன் சரியில்லாதது, பஸ் வசதி இல்லாதது, ஹாஸ்டல் சரியில்லாதது, குடிநீர், கழிப்பறை வசதி சரிவர இல்லாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications