தமிழகத்தில் 'கட்சி வளர்ச்சி' நிதி திரட்டும் பாஜக: ரூ.10 முதல் ரூ.10,000 வரை ரசீதுகள்!
சென்னை: பாஜகவின் துவக்கி விழாவையொட்டி தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த கட்சி வளர்ச்சி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நிதி வசூல் தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றுக் கட்சி பா.ஜக தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர். தமிழகத்திலும் பாஜக மக்களிடம் செல்வாக்கு பெற்று, வளர்ந்து வருகிறது.
நாங்கள் இதுவரை கட்சி வளர்ச்சி நிதி திரட்டியது இல்லை. முதல் முறையாக வளர்ச்சி நிதி திரட்டும் பணியை ஸ்தாபன தினத்தில் இருந்து தொடங்கி இருக்கிறோம்.
இதற்காக ரூ.10 முதல் ரூ.10,000 வரை ரசீதுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக, கிராமம் கிராமமாக நிர்வாகிகள் மக்களை சந்தித்து நிதி திரட்டி வருகிறார்கள். வரும் 17ம் தேதி வரை இந்த பணி நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு ரூ. 1.5 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசியம் காக்க, தேசப் பணியாற்ற, கட்சி வளர்ச்சி நிதியை பொதுமக்கள் வாரி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.