பாஜக தமிழர்களுக்கு ஆதரவான கட்சி அல்ல: ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவான செல்வப்பெருந்தகை சிந்தாதிரிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை நடத்தினார். அதில், சிதம்பரம் பேசுகையில்,
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் பக்கம் காங்கிரஸ் உறுதியாக நின்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 1983ம் ஆண்டில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு துணையாக நின்றுள்ளோம். ராஜீவ் காந்தியை இந்த மண்ணில் தான் இழந்தோம். அந்த இழப்புக்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.
காங்கிரசை பொறுத்த வரை இலங்கை தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து, சம உரிமை, அந்நாட்டின் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் இருந்து எந்த நேரத்திலும் காங்கிரஸ் பின் வாங்கியது இல்லை. இலங்கையில் வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் என 2 மாநிலமாகவோ அல்லது ஒரே மாநிலமாகவோ அமைக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை ஆரம்ப காலம் தொட்டே வலியுறுத்தி வருகிறோம்.
2002ம் ஆண்டில் அதிமுக எடுத்திருந்த நிலைப்பாட்டில் இருந்து இப்போது மாறியுள்ளது. காலத்திற்ற்ப அரசியல் கட்சி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். தவறு இல்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிலையை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
பிரபாகரனை சந்தித்து வேண்டுகோள் வைத்தேன்...
1984ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்தபோது நானே என் காரை தனியாக ஓட்டிச் சென்று அவரைச் சந்தித்தேன். அண்டன் பாலசிங்கம் போன்றோர் இருந்தனர். அப்போது இந்திய அரசோடு ஒத்துழையுங்கள். இலங்கையில் தமிழ் மாநிலம் அமையும். அதன் முதல்வராக நீங்கள் இருப்பீர்கள் என்று வலியுறுத்தினேன். ஆனால் அந்தத் திட்டம் நீர்க்குமிழியாக மறைந்துவிட்டது.
இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிகட்டப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை காங்கிரஸ் மறுக்கவில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் எவ்வாறு ஆதரித்தனவோ அவ்வாறு தான் காங்கிரசும் ஆதரித்தது. அப்படியிருக்கும் போது காங்கிரஸ் மீது மட்டும் பழிபோடுவது ஏன்? காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பழி போடப்படுகிறது.
காங்கிரசை தனிமைப்படுத்த 123 ஆண்டுகளாக முயற்சிக்கும் எல்லா கட்சிகளுமே தோற்று போய் விட்டன. 46 ஆண்டுகளாக ஆளும் திராவிடக் கட்சிகளை நாங்கள் மதிப்பது போல் காங்கிரஸ் கட்சியையும் அவர்கள் மதிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியபடி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சித்தோம்.
நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கருணாநிதி கூறினார். அது தொடர்பாக நானே வரைவு தீர்மானம் எழுதி கொண்டிருந்தேன். அதற்குள் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதுடன் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆதரவு தந்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். திமுகவும், அதிமுகவும் ஆதரித்தன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தை சேர்ந்தவை. நாடாளுமன்றத்தில் காங்கிரசை தவிர வேறு எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை.
பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்யவாவது முடிந்தது. பாஜக தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக தமிழர்களுக்கு ஆதரவான கட்சி இல்லை. பாஜகவின் வேஷம் கலைந்து வருகிறது.
இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டும் தனிக்கட்சி கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தால் அதனை வரவேற்கிறோம். கூட்டணி ஆட்சி என்றாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இது சிறுபிள்ளைகளுக்குக்கூட இந்தக் கணக்குத் தெரியும்.
காங்கிரசிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியா, பாஜகவா என்றால் உங்களின் பாதுகாவலன் யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். மாணவர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது. வன்முறையைத் தவிர்த்துப் போராடுங்கள் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications