திருவாரூரில் எரிவாயுக் குழாய் கசிவு: அச்சத்தில் பொதுமக்கள்

திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தானியங்கி இயந்திரம் உதவியுடன் பூமிக்கு அடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பதிக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயில் நேற்று மதியம் 2 மணியளவில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த காஸ் கசிவை அடைக்க ஓஎன்ஜிசி ஊழியர்கள் போராடினர். பைப்பிலிருந்து வரும் கசிவை அவர்களால் அடைக்க முடியவில்லை. இதனால் காரியமங்கலத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள ஒலிபெருக்கியில் பொதுமக்கள் யாரும் அடுப்பு பற்ற வைக்க வேண்டும். தீக்குச்சிகளை கொளுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர்.
இதனால் காரியமங்கலம், குளமாணிக்கம், பெரியகுருவாடி, இருள்நீக்கி, மாவட்டக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சமையல் கூட செய்யாமல் அச்சத்துடன் இருந்தனர். ஆனால் இந்த மாதிரி அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.
இதனையடுத்து நேற்றிரவு காரைக்கால் மாவட்டம் நிரவியிலிருந்து ஓ.என்.ஜி.சி., தொழில் நுட்ப வல்லுநர்கள் காரியமங்கலத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று 2வது நாளாக காரியமங்கலம் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளை சந்திக்கச் சென்றுள்ளனர். பொதுமக்களிடம் உண்மை நிலவரம் குறித்து எடுத்துரைக்குமாறு அரசு அதிகாரிகள் ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளை வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications