இனி இரவில் மின்வெட்டு இருக்காதாம்: சொல்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்
நெல்லை: மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவையை சமாளிக்க 12,000 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 4,000 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை இருந்ததால் சென்னையில் 2 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 10 மணி நேரமும் மின்தடை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 1 வார காலமாக மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட முக்கிய அனல் மின் நிலையங்கள் 2970 மெகாவாட் நிலுவு திறனை கொண்டுள்ளது. தற்போது இந்த அனல் மின் நிலையங்களில் நிலுவு திறனை விட கூடுதலாக 3070 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் பல மாதங்களாக நின்று போயிருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று மீண்டும் தொடங்கியது. காற்றாலைகள் மூலம் 1,400 மெகாவாட் அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தி 10,600 மெகாவாட் அளவை எட்டியுள்ளது. இதையடுத்து சென்னை தவிர பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் சிறிதளவு குறைக்கப்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
தமிழகத்தில் மின்சார உற்பத்திற்கும், தேவைக்கும் இடையேயான இடைவெளி 1,500 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்பட்டு வரும் மின்வெட்டு நேற்று 6 மணி நேரம் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இரவில் மின்வெட்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் மட்டுமே மின்வெட்டு செய்யப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றனர்.