மெரினா பீச்சில் 'மப்'பில் பெண் வழக்கறிஞரிடம் தகராறு: 2 போலீசார் கைது
சென்னை: மெரினா கடற்கரையில் பெண் வழக்கறிஞரை கிண்டல் செய்து தகராறு செய்த 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கீதா. அவர் சக வழக்கறிஞர் சிவா என்பவருடன் நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்றார். அவர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது டீக்காக உடை அணிந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கீதாவை பார்த்து அருவறுக்கத் தக்க வகையில் பேசி கிண்டலடித்தனர்.
இதை பார்த்த சிவா அவர்களை தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து சிவா இது குறித்து மெரினா போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த 2 வாலிபர்களையும் பிடித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலைச் சேர்ந்த சஜு, பிரபு என்றும், அவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாக தஞ்சையில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.
இருவரும் நண்பரை பார்க்க சென்னை வந்துள்ளனர். கீதா கொடுத்த புகாரின்பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த 100 வழக்கறிஞர்கள் மெரினா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.












Click it and Unblock the Notifications