தர்மபுரியை உறைய வைத்த பயங்கரம்.. பஸ்சில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்
தர்மபுரி: தர்மபுரி பேருந்து நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த தனது காதலியின் கழுத்தை திடீரென கரகரவென அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார் காதலன். கண் இமைக்கும் நேரத்தி்ல நடந்து விட்ட இந்த பயங்கர சம்பவத்தால் பேருந்து நிலையமே பரபரப்பாகிப் போனது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர்.
தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது நேற்று பகல் 12.15 மணியளவில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாம்ராஜ், சந்தியாவின் கழுத்தை அறுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சந்தியா அலறித் துடித்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத சாம்ராஜ் விடாமல் அறுத்தார். அப்போது உயிர் பிழைக்க பஸ்சில் இருந்து வெளியே ஓடிவந்த சந்தியா பஸ் படியிலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த சம்பவத்தைப் பார்த்து மக்கள் பதறிப் போய் விட்டனர். போலீஸாருக்குத் தகவல் பரவியது. தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து கத்தியுடன் நின்று கொண்டு இருந்த சாம்ராஜை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாம்ராஜை விசாரித்தபோது, காதலை மறந்து தன்னுடன் வீட்டை விட்டு ஓடிவர மறுத்த சந்தியாவை துடிதுடிக்க ஆட்டை அறுப்பது போன்று அறுத்து கொன்றதாக சாம்ராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.