ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடையை நீக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த மாதம் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நகர மக்கள் போராடினர்.
பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவுப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல பிரிவின் தலைவராக உள்ளார். அவர் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தங்களின் கருத்துக்களையும் இதில் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ, மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இவர்களின் கருத்துக்களை கேட்கும் வகையில் வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஏப்ரல் 12) ஒத்தி வைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, ஏப்ரல் 12 ம் தேதி நடைபெறும் விசாரணையின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோரின் கருத்துக்களை கேட்ட பின்னரே, இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications