திருப்பதியில் 'ஜருகண்டி, ஜருகண்டி'.... இனிமேல் 'லேதண்டி, லேதண்டி'!

திருப்பதி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வருவதை விட இந்த ஜருகண்டியிலிருந்து தப்பி வருவதே பெரும்பாடாக இருக்கிறது என்பது 99 சதவீத பக்தர்களின் குமுறலாகும்.
சாமி கும்பிட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்போது, அவர்களை பிடித்துத் தள்ளி விடுகிறார்கள் தேவஸ்தான ஊழியர்கள் என்று பக்தர்கள் குறை கூறுகிறார்கள். பெண்களையும் கூட இவர்கள் இப்படித் தள்ளி விடுவதே பெரும்
பிரச்சினையாகி வருகிறது.
சமீபத்தில் கூட நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாயாருடன் கோவிலுக்குப் போயிருந்தபோது அவரது தாயாரைப் பிடித்துத் தள்ளி விட்டு விட்டனர். இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது இந்த ஜருகண்டிக்கு புல்ஸ்டாப் வைக்கவுள்ளது தேவஸ்தானம்.
திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கனுமூரி பாபிராஜு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் நேரடியாக சென்று, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்லும்போது அவர்களை பிடித்து தள்ளாமல் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணாவிடம் சில யோசனைகளை கூறினார்.
பெண் பக்தர்களை ஒழுங்குபடுத்த பெண் ஊழியர்களையும், ஆண் பக்தர்களை ஒழுங்குபடுத்த ஆண் ஊழியர்களையும் நியமிக்க அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் மேல் கை வைத்து ஜருகண்டி.. ஜருகண்டி என்று கூறி தள்ளி விடக் கூடாது. அதற்குப் பதில் கோவிந்தா.. கோவிந்தா' என கூறி மரியாதையுடன் வெளியே அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பார்க்கலாம்... கோவிந்தா கோஷமாவது ஒர்க்அவுட் ஆகிறதா என்று!












Click it and Unblock the Notifications