நாளை கன்னட தெலுங்குப் புத்தாண்டு- ரோசய்யா, ஜெ., கருணாநிதி வாழ்த்து
சென்னை: கன்னட மற்றும் தெலுங்குப் புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, தி்முக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
உகாதி திருநாளை யொட்டி தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லெண்ணம், ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலம் நமது தேசத்தை வலுப்படுத்துவோம். உகாதி என்றால் வெற்றியை குறிக்கிறது. நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் வெற்றியை அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெ. வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாளில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் வாழ்ந்து வரும் பாங்கு, மொழியால் வேறுபட்டோரும் அன்போடும், பண்போடும் வாழ தமிழகம் வழி வகுத்துள்ளது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
தமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், இப்புத்தாண்டில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
கருணாநிதியின் வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் புத்தாண்டு திருநாளைக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை எழுச்சியோடு எங்கும் கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் எதனையும் கருதாமல், எல்லோரிடமும் அன்பு பாராட்டும் மனிதநேயம் மிகுந்த மாநிலம், எப்பொழுதும் எவர் மீதும் பகை கொள்ளாது, பரிவு காட்டிடும் சிறந்த நாகரீகத்தைப் பழங்காலம் தொட்டுக் கடைபிடித்து வரும் மண் இது.
இதனை, உலகப் பேரறிஞர்கள் பெரிதும் போற்றிப் பாராட்டும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' எனும் புறநானூற்றுத் தொடர் புலப்படுத்தும். இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களின் கவசமாகத் திகழும் தி.மு.க எக்காலத்திலும் அண்டை மாநிலங்களுடன் நேசக்கரம் நீட்டி நல்லுறவு பேணுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற மொழிகள் பேசும் அனைத்து மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் தி.மு.க வின் உயரிய கொள்கையையும் இவ்வேளையில் நினைவுபடுத்தி, தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications