ஈரானில் பயங்கரம்... அணு உலை அருகே நிலநடுக்கம்- 30 பேர் பலி

ஈரானின் துறைமுக நகரான புஷர் என்ற இடத்தில் இந்த பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தில் சிக்கி 30 பேர் பலியானார்கள். 800 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூகம்பம் நடந்த இடத்திற்கு வெகு அருகில்தான் ஈரானின் அணு சக்தி நிலையம் உள்ளது. இருப்பினும் பூகம்பத்தால் இந்த அணு உலைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூகம்பத்தின் அதிர்வுகளை பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
கோம்ரோஜ் என்ற இடத்திற்கு அருகே ஒரு கிராமமே பூகம்பத்தில்சிக்கி அழிந்து விட்டதாக செம்பிறை சங்கத்தைச் சேர்ந்த மகமூத் மொசாபர் தெரிவித்துள்ளார். இந்த கிராமத்தில் 12,000 பேர் வசித்து வருகின்றனர்.இவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பூகம்பத்தின் அளவு 6.1 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காகி என்ற இடத்தை மையமாகக் கொண்டுஇந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்திற்குப் பின்னர் 12முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
பூகம்பத்தின் எதிரொலி துபாயிலும் காணப்பட்டது. இதையடுத்து உலகிலேயே மிகவும் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபாவில் இருந்தவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.
அபாயகரமான பகுதி
உலகின் மிகவும் அபாயகரமான பூகம்பப் பகுதிகளில் ஈரானும் ஒன்றாகும். அங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வாடிக்கையாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து 6.2, 6 ரிக்டர் அளவுகோல்களில் பூகம்பம் ஏற்பட்டதில் 300 பேர் உயிரிழந்தனர்.3000 பேருக்கும் மேல் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தில் 31,000 பேர் உயிரிழந்தனர்.
தற்போது பூகம்பம் தாக்கிய பகுதியில் உள்ள அணு மின் நிலையம்தான், ஈரானின் ஒரே அணு சக்தி நிலையமாகும். இதை ரஷ்யாதான் கட்டிக் கொடுத்துள்ளது. இன்னும் இது முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications