’சிறுநீர் ’ பிரச்சனையில் இருந்து விடுபட உண்ணாவிரதம் இருந்த அஜித்பவார்
மும்பை: வறட்சி பிரச்சினையில் சர்ச்சைக்குரிய கருத்துக்காக வருத்தத்தை வெளிப்படுத்த துணை முதல்வர் அஜித் பவார் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
துணை முதல்வர் அஜித் பவார் வறட்சி பிரச்சனையில், ‘‘அணைகளில் தண்ணீர் இல்லாமல் எப்படி திறந்து விட முடியும், அணைகளில் சிறுநீர் கழிக்கவா வேண்டும்? என்று கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சோழ்நிலையில், அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் சட்டசபை கூட்டத்தை முடக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே, இந்த பிரச்சனையில் அஜித் பவார் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டார். மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
மேலும் அஜித் பவார் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் விடாப்பிடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்காக வருத்தத்தை வெளிப்படுத்தவும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உண்ணாவிரதம் இருக்க அஜித் பவார் முடிவு செய்தார். அதன்படி சாங்கிலி மாவட்டம் காரத்தில் உள்ள மறைந்த முதல்வர் யஸ்வந்த்ராவ் சவானின் நினைவிடத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.
காலையில் தொடங்கி மாலை வரை அவர் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவாரின் உறவினர் தான் இந்த அஜீத் பவார் ஆவார்.