45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம்... தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் தொடங்கியது
சென்னை: தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 45 நாள் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் முடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி 45 நாட்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்த தடை அமுல்படுத்தப்படுகிறது. இந்த கால கட்டத்தில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 13 கடலோர மாவட்டங்களில் விசைப்படகுகள், இழுவைபடகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீனவர்களையும், மீன்பிடி சார் தொழிலாளர்களையும் சேர்த்து சுமார் மூன்றரை லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
தடைகாலத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 290 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இவற்றை பராமரிக்கும் பணியில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.2000 நிவாரணம்
மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மீனவர்களின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாயை அரசு செலுத்துகிறது. இந்த தொகை மிகவும் குறைவு என்று குறைபட்டுக் கொள்ளும் மீனவர்கள், குறைவான தொகையும் காலதாமதமாக கிடைப்பதால் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர்.
கழிவுகள் கடலில் கலக்கின்றன
இந்த கால கட்டங்களில் மட்டுமே மீன்கள் இனப்பெருக்கும் செய்வதில்லை என்பதால் இதன் மூலம் கடல் வளத்தை பெருக்க முடியாது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பதைத் தடுப்பதோடு, மீன்பிடித் தடைக் காலத்தில் வெளிநாட்டு மீனவர்கள் நமது கடல் பகுதியில் மீன்பிடிப்பதையும் தடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இலங்கை கடற்படை அத்துமீறல்
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும், பாரம்பரிய இடங்களில் மீன்பிடி உரிமை வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முன்வைத்துள்ளனர். செயற்கை பவளப்பாறைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இரட்டை மடிவலை தயாரிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் போன்றவை மீனவர்களின் பிற கோரிக்கைகளாகும்.












Click it and Unblock the Notifications