சிறுவன் நரபலி: மூடநம்பிக்கை பற்றி கருணாநிதி வேதனை

நரபலிக்காக குழந்தையைக் கொலை செய்த செய்தியை பத்திரிகை ஒன்றில் பார்த்தேன். இந்தச் செய்தியைப் படித்தபோது, நாம் 21-ம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது.
அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒரு சிறு கிராமமாகச் சுருக்கியதோடு உள்ளங்கையில் உலகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; ‘‘செய்வினை, குடுகுடுப்பைக்காரன், தாயத்து, தோஷம், நரபலி'' என்றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒரு பகுதி விடுபடவில்லையோ என்று தோன்றுகிறது.
உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக மூடநம்பிக்கையும், நல்ல கழனியில் தோன்றும் களையைப் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமுதாயத்தை அரிக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக்கைக் களையை முற்றிலுமாக அகற்றுவது என்பது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகும். அரசியலைக் கடந்து, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அனைவரும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணியாகும் இது.
‘‘நமது மக்கள் அனைவரும் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து என்றைக்கு விடுபடுகின்றார்களோ, அன்றுதான் நம் நாட்டின் உண்மையான விடுதலையை நாம் அடைந்ததாக அர்த்தமாகும்'' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை, அனைவரும் நினைவு கூர்ந்து, அயராது செயலாற்றுவதே நமது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும். இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications