ஈமு கோழி மோசடி: சுசி நிறுவன சொத்துக்கள்- வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாகக் கொண்டு சுசி ஈமு கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதேபோல் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் மாவட்டத்திலும் ஏராளமான ஈமு கோழி பண்ணைகள் செயல்பட்டு வந்தன.
ஈமு கோழியில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பிய விவசாயிகளும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பணம் கட்டியவர்களுக்கு பண்ணையாளர்கள் சார்பில் பண்ணைகள் அமைத்து ஈமு கோழிகள் வழங்கப்பட்டது. தீவனமும் வழங்கப்பட்டது.
சில மாதங்கள் சரியாக பணம் கொடுத்த பண்ணையாளர்கள் பின்னர் நாளடைவில் பணம் கொடுக்காமல் ஏமாற்றத் தொடங்கினர். சுசி ஈமு நிறுவனம் உள்பட அனைத்து ஈமு கோழி நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி பணம் கொடுக்காமல் இழுத்தடித்தன. வட்டியும், கட்டிய பணமும் வராததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பல நூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்தவர்கள் சுசி ஈமு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். ஈமு நிறுவன மோசடி குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சுசி நிறுவன நிர்வாக இயக்குனரான குரு என்பவரை கைது செய்தனர். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுசி ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
சுசி ஈமு நிறுவனத்துக்கு சொந்தமான பணம் பல்வேறு பெயர்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு1 கோடியே 37 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஈமு கோழி நிறுவனத்திற்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து குருவுக்கு சொந்தமான 3 கார், ஒரு வேன், ஒரு ஜீப், ஒரு லாரி, 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்களை வருவாய் துறை மூலம் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பணம் திரும்பக் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications