சீனத் தமிழர்கள் இணைந்து தொடங்கிய "தமிழ் சங்கமம்'
பெய்ஜிங்: தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சீனாவில் பணிபுரியும் தமிழர்கள் இணைந்து ‘தமிழ் சங்கமம்' என்ற கலாச்சார அமைப்பினை தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் சார்பில் பெய்ஜிங்கில் தொடங்கப்படும் இரண்டாவது அமைப்பு இதுவாகும்.
சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பணிபுரிந்து வரும் 70-க்கு மேற்பட்ட தமிழர்கள் இணைந்து முதன்முறையாக தமிழ் சங்கமம் என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர்.
இந்த புதிய அமைப்பை சீன சர்வதேச வானொலியின் தமிழ்ச்சேவைப் பிரிவில் பணிபுரியும் சீனரான மரியா மைக்கேல் தொடங்கி வைத்தார்.
இதன் ஆரம்ப விழாவில் பீஜிங்கில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை மற்றும் மலேசியாவை சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பெருமளவில் பங்கேற்றனர்.
தமிழர்களின் திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுவதும், தமிழர்கள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடல்களில் பங்கேற்க வைப்பதும், தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பீஜிங் தமிழ் சங்கமத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தமிழ் சங்கமத்தை தொடக்கி வைத்த மரியா மைக்கேல் கூறினார்.
சீனாவில் ஏற்கெனவே பெய்ஜிங் மலையாளிகள் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. தற்போது தமிழர்களுக்காக தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications