‘இரும்புப் பெண்மணி’ ஜெயலலிதா: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் புகழாரம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பல்கலைக்கழகமாக மாற்ற திங்கட்கிழமையன்று தமிழக சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவரப்பட்டது. அரசின் அறிவிப்புக்கு அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசின் அறிவிப்பு வெளியான உடன் பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தின் இரும்பு பெண்மணி
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராக 1981-ம் ஆண்டு முதல் அப்போதைய ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எல்.சிதம்பரம் தலைமையில் சுதந்திர போராட்டத்தை தொடங்கினோம். தொடர்ந்து ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. இணைவேந்தர் எம்ஏஎம்.ராமசாமியை நீக்க வேண்டும் என போராட்டத்தை நடத்தி வந்தோம்.
பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக முதல்வர் சட்டமாற்றம் கொண்டு வந்தது முந்தைய அரசுகள் செய்யாத ஒரு துணிச்சலான வரலாற்று சிறப்புமிக்க செயலாகும். மிகப்பெரிய தொழிலதிபரும், ஜாம்பவானுமான எம்.ஏ.எம்.ராமசாமியை எதிர்த்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் அவர் தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்பதை நிருபித்துவிட்டார் என்றார்.
12,500 ஆசிரியர்கள் நன்றி
இந்த வரலாறு மாற்றத்தை தொடங்கி வைத்த பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல்கலைக்கழகத்தின் 12500 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழக முதல்வர் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றியமைக்க உத்திரவிட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளார். எனவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7585 கோடி நிதி வசூல்
கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைக்கழக வளர்ச்சி நிதி என்ற பெயரில் அனுமதி சேர்க்கை, பணி நியமனம் மூலம் இணைவேந்தரால் 7585 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை அவரிடமிருந்து வசூலித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கணக்கில் வரவு வைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதியழகன் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications