நடுத்தர மக்களுக்கு இது தங்கமான நேரம்... நகைக்கடைகளில் குவியுது கூட்டம்!
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக நகைக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை கடந்த வாரம் முதல் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ.24,544-க்கு விற்பனையானது.
ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 68 ஆக இருந்தது. இதனால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்துக்கு தங்கம் வாங்க அரசு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

விலைச் சரிவு
ஆனால் இப்போது திடீரென்று தங்கம் விலை சரிந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.2,544 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.2,441க்கும் ஒரு சவரனுக்கு ரூ.19,528 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சரிந்ததை தொடர்ந்து மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரூ 1000 கோடிக்கு...
சென்னையில் வழக்கமாக தினமும் சுமார் 1000 கிலோ தங்கம் விற்பனையாகும். விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே தங்க நகை விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் அப்போது விற்பனை சூடு பிடித்துள்ளது. எல்லா நகை கடைகளிலும் 2 மடங்கு விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் மட்டும் தங்க விற்பனை ரூ.1000 கோடியை எட்டி பிடித்துள்ளதாக கூறுப்படுகிறது.

அலைமோதும் கூட்டம்
சென்னையில் தியாகராய நகர், மைலாப்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட பல பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் நகை கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 4 நாட்களாகவே விற்பனை 2 மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர் நகைக் கடைகாரர்கள்.

என்ன காரணம்?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார எழுச்சி மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சில நாடுகள் இருப்பில் வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்யலாம் என்று கருதப்படுவதால் தங்க முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்கத் தொடங்கி உள்ளனர். இதுவே விலை குறைவுக்கு காரணம் எனப்படுகிறது. மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இன்றைய விலை
இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து, 19408 க்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications